மடிப்புநுண்ணோக்கி வழியே சின்னஞ்சிறிய உலகம் இன்று பள்ளித்தேர்வுகள் இல்லை.எனவே மடிப்புநுண்ணோக்கி வழியே சிறிய பூச்சிகள்,மெல்லிய இலைகள்,வேர்,தண்டுகள் என காண்பித்தோம்.இன்னும் பெரிய திரையில் பார்க்க குழந்தைகள் விருப்பப்பட்டதனால் அதை திரையிட்டு கண்டுரசித்தோம்.கீழ்வேளூர் ஒன்றிய தொடக்கக்கல்வி அலுவலர் சொக்கலிங்கம் ஐயா அவர்கள் பார்வையிட்டு பாராட்டினார்கள். சின்னஞ்சிறிய உலகத்தின் அழகில்,அற்புதத்தில் சிறுதுளியை ரசித்த மகிழ்ச்சி அனைவருக்கும் இருந்தது.இயற்கையின் உழைப்பு,இயற்கையின் தேர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அறிவியல் அழகானது,ஆழமான உண்மைகளைக் கொண்டது,பலபுதிர்களுக்கு சரியான பதிலைதரவல்லது என அனைத்து குழந்தைகளும் உணரத்தொடங்கியிருப்பர். இத்தகைய எளிய அறிவியல் கருவி கிராமப்புற குழந்தைகளுக்கு அளவிடமுடியாத அற்புதம்தான்.இந்திய விஞ்ஞானி மனுப்பிரகாஷ் இத்தகைய கருவியை அளித்து அறிவியல் உலகிற்குள் குழந்தைகளை ஆனந்தமாய் நுழைய வைத்துள்ளார். மடிப்பு நுண்ணோக்கி குறித்த பயிற்சியினை முதலில் மதுரையில் நடந்தது. சகோதரர்கள் பால இரணியன்,பிரபாகரன் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநிலத்தலைவர் பேரா.கிருஷ்ணசாமி அவர்களும்,கல்வியாளர் மொ.பாண்டியராஜன் அவர்களும் சிறப்பாய் ஒருங்கிணைத்து பயன்பாட்டுமுறைகள் குறித்து விளக்கம் தந்தனர். மேலும் அங்கு துளிர்இல்லக்குழந்தைகளே வந்திருந்த அனைவருக்கும் மடிப்புநுண்ணோக்கி செய்முறைவிளக்கம்தந்து பயன்படுத்தக் கற்றுத்தந்தனர். அதன்விளைவாக நாகை மாவட்ட துளிர்இல்லங்களிலும்,9 பள்ளிகளிலும் இந்நிகழ்வை நாங்கள் எடுத்துச்சென்றோம்.இன்று எங்கள் கீழ்வேளூர் தொடக்கப்பள்ளியில் இதன்பயனை குழந்தைகள்,ஆசிரியர்கள் அனைவரும் அனுபவித்தனர். இன்னும் பல துளிர்இல்லங்களுக்கு பள்ளிகளுக்கு நாங்கள் எடுத்துச்செல்வோம். இத்தகைய வாய்ப்பை உருவாக்கித்தந்த பேரா.கிருஷ்ணசாமி சார்,மொ.பாண்டியராஜன் சார்,பயிற்சி அளித்த துளிர் இல்லக்குழந்தைகள், தகவல் அளித்த அறிவியல் பிரச்சார உபக்குழு ஒருங்கிணைப்பாளர் கவனகன் சார் மற்றும் இவர்களுடன் எங்களை இணைத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திற்கும், மேலும் பார்வையிட்டு பாராட்டிய தொடக்கக்கல்வி அலுவலர் சொக்கலிங்கம் ஐயா அவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கியமாக கோடானகோடி குழந்தைகள் அறிவியலின் பயனை அனுபவிக்க காரணமான மடிப்பு நுண்ணோக்கியை உருவாக்கித்தந்த விஞ்ஞானி மனுப்பிரகாஷ் அவர்களுக்கு எங்களது நன்றிகள் பல…
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!