மத்திய அரசின் அறிவியல் கல்வி நிறுவனமாக DBT பிரகாஷ் லேப் உடன் இணைந்து ICGEB புது டெல்லியில் இரண்டு நாள் நாடுதழுவிய பயிற்சி முகாமை கடந்து 16,17 ஆகிய தேதிகளில் நடத்தியது. இந்த பயிற்சி முகாமில் என்னை பயிற்சியாளராக அழைத்தமைக்கு DBTக்கும் விஞ்ஞானி மனுபிரகாஷ் அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டில்லியில் என்னை முழுமையாக கவனித்துக்கொண்ட விஞ்ஞானி சாம் என்ற ஆரோகக்கியசாமி அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி என்பது அறிவியல் வரலாற்றில் மிக மிக முக்கியமானது என உணர்ந்ததன் விளைவே இந்த பதிவு. ஏனெனில் இந்தியா முழுவதிலிருந்தும் 455க்கும் மேற்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலை கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் பங்கேற்றன என்பதிலிருந்தும் நாம் இதன் முக்கியதுவத்தை உணரலாம். இந்த பயிற்சி ஆராய்ச்சி நிறுவனங்களையும், கல்வி நிறுவனங்களையும், மாணவர்களையும் ஊடாக சமூகத்தையும் விஞ்ஞானிகளையும் இணைக்க போகும் மிகப் பெரிய ஓராண்டு நிகழ்வு. மக்களையும் விஞ்ஞானிகளையும் இணைக்கப்பபோவது இந்த மடிப்பு நுண்ணோக்கி என்னும் மிகச் சிறிய சிறந்த ஒரு அறிவியல் உபகரணம் . இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் பேரா.கே. விஜயராகவன்,DBTயின் ஆலோசகர் முனைவர். சைலஷா வி குப்தா, மடிப்பு நுண்ணோக்கி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான முனைவர். ஜிம் சைபல்ஸ்க்கி மற்றும் ICGEB யின் இயக்குனர் முனைவர் தினகர். விஞ்ஞானி வைசாலி ஆகியோர் இரண்டு நாள் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் இந்த முகாம் எவ்வளவு முக்கியமான முகாம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். பயிற்சி முகாமிற்கு முன்பான ஏற்பாடாக 15.04.2018 அன்று மாலை 5.30 மணிக்கு பயிற்சி யாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முனைவர். ஜிம் சைபல்ஸ்க்கி கலந்து கொண்டு பயிற்சி வழங்கினார். சுமார் 20க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கியை இணைப்பது குறித்தும், சிலைடு தயாரிப்பது குறித்தும், மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் ஏற்பட்ட சந்தேகங்களை முனைவர். ஜிம் சைபல்ஸ்க்கி தீர்த்துவைத்தார். அத்தோடு அவர்களுக்கு சில ட்ரிக் யோசனைகளையும் அவர் பயிற்சியாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். REBECCA KONTE அவர்களும் பயிற்சியில் பங்கேற்றது கூடுதல் சிறப்பு. 16.04.2018 அன்று முதல் நாள் பயிற்சி தொடங்கியது. இதில் 198 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். 3 இடங்களில் பயிற்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு பதிவு தொடங்கும் போதே மிக நீண்ட வரிசையில் ஆசிரியர்கள் நின்று பதிவு செய்தனர். பதிவு செய்து கொண்டவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பை கொடுக்கப்பட்டது. அதன் பிறகு ஜிம் அவர்கள் அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி குறித்த அறிமுகத்தையும் அதனை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தார். தொடக்க நிகழ்ச்சியில் DBT,ICGEB நிறுவங்களிலிருந்து உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஆனால் அவர்கள் இந்த பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு பெரிதாக உதவும் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் பட்செட் குறித்தே அவர்கள் கவலையாக இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் மடிப்பு நுண்ணோக்கி பள்ளி அளவில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அவர்கள் பயன்படுத்தும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். எனவே அவர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டல் தேவைப்படும் என்பதை என்னால் உணரமுடிந்தது. பயிற்சியின் இறுதியில் பங்கேற்றவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்திய அரசின் அறிவியல் ஆலோசகர் பேரா.கே. விஜயராகவன்,DBTயின் ஆலோசகர் முனைவர். சைலஷா வி குப்தா, மடிப்பு நுண்ணோக்கி கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான முனைவர். ஜிம் சைபல்ஸ்க்கி மற்றும் ICGEB யின் இயக்குனர் முனைவர் தினகர். ஆகியோர் பதில் அளித்தனர். 17.04.2018 அன்று பல்வேறு கல்லூரி , பல்கலை கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து 245 பேர் பங்கேற்றனர். இதற்கு மூன்று அரங்குகள் போதுமானதாக இல்லாததால் கூடுதலா ஒரு அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 25க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவரும் அறிவியல் அறிஞர்கள். விஞ்ஞானிகள். அவர்கள் அனைவரும் பயிற்சியில் உற்சாகமாக பங்கேற்றனர். மடிப்பு நுண்ணோக்கி பெரிதாக ஆராய்ச்சியில் உதவும் என்பதை அவர்கள் பெரிதும் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டனர். சிலைடு தயாரிப்பில் உற்சாகமாக பங்கேற்றனர். மேலும் அவர்கள் மடிப்பு நுண்ணோக்கியை பயன்படுத்தும் விதத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை பலமுறை கேட்டறிந்தது அவர்களுடைய ஆர்வத்தை அறிந்து கொள்ள உதவியது. ஆசிரியர்களை காட்டிலும் விஞ்ஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் உற்சாகமாக பங்கேற்றனர். இந்த இரண்டு நாளும் அற்புதமாக இருந்தது. ஜிம், அம்மா மற்றும் REBECCA KONTE ஆகியோரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் மும்பையில் சந்தித்த தாராவி குழந்தைகளை மீண்டும் சந்தித்தது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. குறிப்பா தீபக் மோடியை சந்தித்ததும் அற்புதம். இத்தனை வாய்ப்புக்கும் காரணம் ICGEB விஞ்ஞானியாக பணியாற்றும் சாம் என்ற ஆராக்கியசாமி. அவர் 2015 டிசம்பரில் எங்கள் பள்ளிக்கு வந்து கொடுத்த அந்த மடிப்பு நுண்ணோக்கிதான் இன்று நான் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்கும் அளவிற்கு வந்துள்ளது. சாம் தலைமையிலான குழுவினரின் பம்பர சுழற்சியினால்தான் இந்த பயிற்சி முகாம் வெற்றியை பெற்றது. அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!